திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் தம்பதியர், தங்களின் திருமணத்தைப் பதிவு செய்துகொள்வது 2009-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, திருமணப் பதிவு குறித்த நடைமுறைகளைப் பார்க்கலாம்...
`தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009'-ன்படி திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட், விசா பெறுவது முதல் பல்வேறு விஷயங்களுக்கும் திருமண பதிவுச் சான்றிதழ் அவசியம் என்பதால், திருமணமான ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்யத் தவறக் கூடாது.
திருமணப் பதிவு குறித்து ஏற்கெனவே ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்றவாறு சட்டங்கள் இருக்கின்றன. அத்துடன் சிறப்புத் திருமணச் சட்டமும் இருக்கிறது. இந்தச் சட்டங்களின் அடிப்படையில்தான் திருமணங்கள் பதிவு செய்யப்படும். இந்தப் பதிவானது விருப்பத்தின் அடிப்படையில் இருந்ததை, தற்போதைய 2009-ம் ஆண்டு சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.
திருமணம் பதிவு செய்யும் முறை:-
திருமணம் முடிந்த தம்பதியர் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தில், `பதிவு செய்தல்' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, பயனர் பதிவை (அக்கவுன்ட்) உருவாக்க வேண்டும். பின்னர், `திருமணப் பதிவு' என்ற பகுதிக்குச் சென்று, அதில் உள்ள விண்ணப்பத்தை இணையத்திலேயே பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்யும்போது கேட்கப்படும் ஆவணங்களை ஸ்கேன் செய்து மணமக்களின் புகைப்படங்களுடன் சேர்த்து இணைக்க வேண்டும்.
விண்ணப்பித்து முடித்தவுடன் உங்கள் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து, சில மணி நேரத்தில் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அதில் உங்கள் திருமணத்தைப் பதிவுசெய்துகொள்ள, நீங்கள் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வர வேண்டிய தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
குறிப்பிடப்பட்ட தேதியில் உங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, ஒரிஜினல் ஆவணங்களுடன் உங்களின் இணையர் மற்றும் சாட்சி கையொப்பமிட மூன்று நபர்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்.
திருமணப் பதிவு சந்தேகங்களுக்கு...
1800 102 5174
சந்தேகங்களுக்கு என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் (அரசு விடுமுறை நாள்கள் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம்).
எந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ளலாம்?
திருமணம் நடந்து 90 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதைக் கடந்துவிட்டால், அதற்கான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
உங்கள் மதச்சட்டத்தின்படி உங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய விரும்பினால், இந்துக்கள் எனில், இந்து திருமணச் சட்டத்தின் கீழும், கிறிஸ்துவர்கள் எனில், கிறிஸ்துவ திருமணச் சட்டத்தின் கீழும், இஸ்லாமியர்கள் எனில், இஸ்லாமிய திருமணச் சட்டத்தின்படியும் பதிவு செய்துகொள்ள முடியும். இதைத் தவிர்த்து சிறப்பு திருமணப் பதிவுச் சட்டம் என்ற ஒன்றும் இருக்கிறது. இருவேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, அதைச் சிறப்பு திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், சாதி, மதம் உள்ளிட்ட எந்தவொரு சமூகப் பிரிவுகளையும் பொருட்படுத்தாமல், சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி திருமணம் செய்துகொள்கிறவர்களும் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்
ஆன்லைன் விண்ணப்பம்,
திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் (திருமண அழைப்பிதழ்,
கோயில், பள்ளிவாசல், சர்ச் என எங்கு திருமணம் நடந்ததோ அதற்கான ரசீது),
முகவரிச் சான்றுக்காக வாக்காளர் அட்டை,
குடும்ப அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்,
வயதுச் சான்றுக்காக பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்,
சாட்சி கையொப்பம் இடும் மூன்று நபர்களின் அடையாள அட்டை,
மணமக்களின் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்.
திருமணச் சான்று தொலைந்தால் என்ன செய்வது?
2016-ம் ஆண்டுக்குப் பின் பதிவு செய்தவர்களின் திருமண சான்றுகள் அனைத்துமே இணையத்தில் உள்ளன. எனவே, எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதி சார்பதிவாளரிடம் கையொப்பம் பெற்று, அசல் சான்றிதழாக மாற்றிக்கொள்ளலாம். 2016-ம் ஆண்டுக்கு முன் திருமணத்தைப் பதிவு செய்தவர்கள் எனில், இதற்கு முன் உங்கள் திருமணத்தை எங்கு பதிவு செய்தீர்களோ, அதே அலுவலகத்தில் சார்பதிவாளரிடம் உரிய ஆவணங்களுடன் மனுக்கொடுத்து சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
சட்டத்திருத்தம்!
திருமணம் எந்த இடத்தில் நடந்ததோ அந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட அலுவலகத்தில் மட்டும்தான் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் சமீபத்தில் திருத்தப்பட்டுள்ளது. எனவே திருமணம் நடைபெற்ற இடத்தில் உள்ள சார்பதிவு அலுவலகம் மற்றும் மணமக்கள் இருவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள சார்பதிவு அலுவலகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் திருமணப்பதிவை மேற்கொள்ளலாம்.
கட்டாய திருமணப் பதிவு சட்டத்துக்கு முன்னதாகத் திருமணம் செய்து, இதுவரையில் பதிவு செய்யாமலிருப்பவர்களும் திருமணப் பதிவை மேற்கொள்ளலாம். இதற்கென உரிய கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
நன்றி:- விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
5 வகையான ஒயிட் குஸ்கா செய்வது எப்படி
5 வகையான ஒயிட் குஸ்கா செய்வது எப்படி --- 1. சாதாரண ஒயிட் குஸ்கா தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – 1 கப் வெங்காயம் – 2 (நறுக்கிய...
-
நம்மில் பலர் இருப்பிட சான்றிதலுக்கும், பிறப்பிட சான்றிதலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறியாமல் குழம்பிக்கொள்கின்றோம். இருப்பிடச் சான்றித...
-
பத்து வகை குலோப் ஜாமுன் ரெசிபி..... 💥💥❤️💥💥❤️💥💥❤️💥💥❤️💥💥❤️💥 1. பாரம்பரிய குலோப் ஜாமுன் (Traditional Gulab Jamun) இதுதான...
-
ஹனி கோபி செய்வது எப்படி... தேவையானவை: காலிஃப்ளவர் – ஒரு கப் (உதிர்க்கவும்) சோள மாவு – 4 டேபிள்ஸ்பூன் மைதா – ஒரு டீஸ்பூன் எண்ணெய்...
No comments:
Post a Comment