தட்டைப்பயறு குழம்பு செய்வது எப்படி....
தேவையானவை:
தட்டைப்பயறு (சிவப்பு காராமணி) - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி (பெரியது) - ஒன்று
கத்திரிக்காய் (இளசாக) - 3
முருங்கைக்காய் - ஒன்று
பூண்டு - 2 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - கொட்டைப்பாக்கு அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு:
தேங்காய் (துருவியது) - 2 டேபிள்ஸ்பூன்
குழம்பு மசாலாப்பொடி - 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து, சூடானதும் தட்டைப் பயற்றை குக்கரில் போட்டு, எண்ணெய் ஊற்றாமல், வாசனை வரும் வரை வறுக்கவும். சிவக்க வறுபட்டதும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, வேகவைக்கவும். ஐந்து விசில் வந்தவுடன், திறந்து பார்த்தால், உடையாமல் வெந்து இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி, கடுகைப் போட்டு அது வெடித்ததும் உளுத்தம் பருப்பைப் போட்டு, அதன் பிறகு வெங்காயத்தையும் பூண்டுப் பல்லையும் போட்டு வதக்கவும். பின்பு கறிவேப்பிலையைச் சேர்த்து, நறுக்கிவைத்த கத்திரிக்காய், முருங்கைக்காய், தக்காளி சேர்த்து வதக்கவும். இந்தக் காய்கள் எண்ணெயில் கலந்து வதங்க ஆரம்பித்ததும், வேகவைத்த தட்டைப் பயற்றில் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு அரைத்து வைத்த மசாலா விழுதையும், தேவையான அளவு உப்பையும் மஞ்சள்தூளையும் சேர்த்துவிடவும். பின்பு, கரைத்துவைத்த புளிக்கரைசலை இதனுடன் சேர்த்து, பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரை மூடவும். இரண்டு விசில் வந்தவுடன் திறந்து பார்க்கவும். நாம் ஊற்றிச் சாப்பிடும் அளவு குழம்பு தளர இருந்தால், கொத்தமல்லித்தழையைக் கிள்ளிப் போட்டுப் பரிமாறவும். இன்னும் கொஞ்சம் குழம்பு தேவையானால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.
#sivakarthikasamayal
No comments:
Post a Comment